தமிழீழம் கிடைத்திருந்தால், அதற்காக தமது உயிரை அர்ப்பணித்து போராடிய போராளிகளுக்கு தான், வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
அதற்காக தனியான ஒதுக்கீடு கொண்டு வரப் பட வேண்டும். போராடப் போகாமல் சொகுசாக வாழ்ந்து, பல்கலைக்கழகம் வரை படித்து முடித்தவரைத் தான், வேலைகளுக்கான நேர்முகப் பரீட்சையில் தேர்ந்தெடுக்கக் கூடாது.
தனி நாடு கிடைத்த பின்னர் போராளிக்கு வேலை கிடைக்காது என்றால், பிறகென்ன ...... அவன் போராட வேண்டும்? தனி நாடு கிடைத்த பயனை, போராடாமல் சொகுசாக வாழ்ந்த ஒருவன் அனுபவிக்கிறான் என்றால், அந்த தனி நாடு எதற்கு? அது யாருக்கான விடுதலை?
ஈழத்தில் "புலி ஆதரவாளர்" வேஷம் போடும், வலதுசாரிகளின் சுயரூபத்தை அறிந்து கொள்ள ஒரு வழியுள்ளது.
புலிகளின் ஆட்சிக் காலத்தில், "தமிழர் ஒற்றுமையை குலைக்கும் சாதி வெறியர்கள்", "தமிழர்களை சுரண்டும் முதலாளிகள்" ஆகியோரை, சமூகவிரோதிகளாக அறிவித்து, மரண தண்டனை விதித்திருக்க வேண்டும் என்று சொல்லிப் பாருங்கள். அந்த நிமிடத்தில் இருந்து, அவர்கள் புலி எதிர்ப்பாளராக மாறி விடுவார்கள். திடீரென புலிகளின் மனித உரிமை மீறல்கள் பற்றி எமக்கு வகுப்பெடுப்பார்கள்.
வறுமையின் நிமித்தம் பாலியல் தொழில் செய்த அபலைப் பெண்ணுக்கு, புலிகள் மரண தண்டனை வழங்கியதை ஆதரித்தார்கள். ஆனால், பல தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்களை வன்புணர்ச்சி செய்த சாதி வெறியர்களை "மன்னித்து" விட்டு விடச் சொல்கிறார்கள்.
வறுமை காரணமாக மாடு திருடியவனுக்கு மரண தண்டனை வழங்கியதை ஆதரித்தார்கள். அதே நேரம், கோடி கோடியாக கொள்ளையடித்த முதலாளிகளையும், நிலவுடைமையாளர்களையும் கண்டுகொள்ளாமல் விடச் சொல்கிறார்கள்.
ஈழத்து அரசியல் களத்தில், ஆணாதிக்கம், சாதிய மேலாதிக்கம், முதலாளித்துவ சுரண்டல் என்பன, தமிழ் தேசியத்தின் பின்னால் ஒளிந்து கொண்டுள்ளன. அதற்குக் காரணமான சமூக விரோத சக்திகள், புலிகளின் பாணியில் களையெடுக்கப் படாத வரையில், தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு அடி கூட முன்னோக்கி நகர முடியாது.
புதுசு புதுசாக தமிழ் (தேசிய) இணையத் தளங்கள் முளைத்துக் கொண்டிருந்த காலமது. அப்போது என்னை சந்தித்த புலம்பெயர்ந்த புலிகளின் செயற்பாட்டாளர் ஒருவர் கேட்டார்: "அண்ணே, நீங்களும் ஒரு இணையத்தளம் நடத்துங்கோ... அதற்கான செலவுகளை நாங்கள் தாறம்..."
அவர் அடுத்து சொன்ன "நிபந்தனை" தான், தமிழ் இணையத்தளங்களின் சுயத்தை வெளிப்படுத்தியது. "செய்திகளை சேகரிப்பதற்கு சிரமப் படத் தேவையில்லை... பதிவு, புதினம் அல்லது தமிழ்நெட் போன்ற இணையத்தளங்களில் வரும் தகவல்களை, அப்படியே கொப்பி பேஸ்ட் செய்து போட்டால் போதும்!"
ஒரு தடவை, "புலம்பெயர்ந்த புலிகளின் பிரதிநிதி" என்று கூறிக் கொண்டு, அதிர்வு என்ற இணையத்தளம் நடத்தும் கண்ணன், எனது சி.ஐ.ஏ. பற்றிய கட்டுரை ஒன்றை தானே எழுதியதாக எடுத்துப் போட்டிருக்கிறார். அதைப் பல நண்பர்கள் சுட்டிக் காட்டினார்கள். அதைப் பார்த்த பொழுது,எனக்கு அந்த ஞாபகம் தான் வந்தது.
சொந்தச் சரக்கு எதுவுமில்லாத "புலி ஆதரவு தமிழ் தேசியவாதிகள்", கொள்கை, கோட்பாடுகளை இடதுசாரிகளிடம் கடன் வாங்குவது அடிக்கடி நடக்கும் விடயம். ஏற்கனவே, "சுயநிர்ணயம், ஏகாதிபத்தியம், பேரினவாதம், அரச பயங்கரவாதம்" போன்ற பல அரசியல் கலைச் சொற்களை, அவர்கள் இடதுசாரிகளிடம் இருந்து தான் கற்றுக் கொண்டார்கள். அதை வெளிப்படையாக சொல்வதற்கு என்ன தயக்கம்? நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று.
கருத்துகள்
கருத்துரையிடுக