இனவாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு பலியாகாதீர்கள் தமிழர்களே!
//வன்னியில் இறுதி யுத்தம் நடந்த போது "அவர்கள்" (முஸ்லிம் மக்கள்) வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அதனால், "நாங்கள்"(தமிழ் மக்கள்) ஏன் "அவர்களுக்காக" குரல் கொடுக்க வேண்டும்?//
இப்படிப் பேசுவதும், பதிவிடுவதும் இனவாதத்தை ஆதரிக்கும் செயல் ஆகும். எல்லாவற்றுக்கும் முதலில், மக்களை இன அடிப்படையில் "நாங்கள்", "அவர்கள்" என்று பிரிப்பது இனவாதத்தின் பாலபாடம் ஆகும்.
- அப்போது நடந்த இறுதி யுத்தம், அமெரிக்கப் பாணியில் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்று அறிவிக்கப் பட்டு தான் நடந்தது. அதனை அமெரிக்காவும் ஆமோதித்தது என்பது வேறு விடயம்.
- இறுதிப் போரின் வெற்றியானது புலிகள் இயக்கத்திற்கு எதிரான வெற்றியாக கருதப் பட்டது. பொது மக்களில் பெரும் பகுதியினர், எப்படியாவது போர் முடிந்தால் சரி என்றும் நினைத்தனர்.
- அதை "தமிழினத்திற்கு எதிரான வெற்றி" யாக எடுத்துக் கொண்டவர்கள் இனவாதிகள் மட்டுமே. அது ஒட்டுமொத்த சிங்கள, முஸ்லிம் மக்களின் கருத்து அல்ல.
- பெரும்பாலான சிங்கள, முஸ்லிம் மக்கள் மட்டுமல்லாது, குறிப்பிட்டளவு தமிழர்கள் கூட, புலிகள் தோற்கடிக்கப் படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இருப்பினும், மக்கள் இழப்புகள் குறித்துக் கவலைப் பட்டவர்கள் மூவினங்களிலும் இருந்தனர்.
- தென்னிலங்கை ஊடகங்கள் எல்லாம் போர் நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, பொது மக்கள் இழப்பை புறக்கணித்தன. கடுமையான செய்தித் தணிக்கை விதித்த அரசின் உத்தரவுக்கிணங்க மிகக் குறைவான எண்ணிக்கையை காட்டின.
- பொதுவாக ஊடகங்கள் சொல்வதை நம்பும் மக்கள் தான் அதிகம். பெரும்பாலானவை பிரச்சார ஊடகங்கள் தான். அமெரிக்கா முதல் இலங்கை வரை இது தான் யதார்த்தம். தமிழர்களும் அதற்கு விதிவிலக்கல்ல.
- ஆகவே, "சிரித்தார்கள்... வேடிக்கை பார்த்தார்கள்.." என்று ஒட்டு மொத்த (சிங்கள, முஸ்லிம்) மக்களின் மீதும் பழிபோடுவது தவறானது. இது இனவாதிகளின் அரசியல் அபிலாஷைகளை கருத்தில் கொண்டு பரப்பப் படுகின்றது.
- இதைத் தான் சிறிலங்கா பேரினவாத அரசும் எதிர்பார்க்கிறது. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று சும்மாவா சொன்னார்கள்?
கருத்துகள்
கருத்துரையிடுக