ஜெர்மன் மொழிப் படமான "Barbara", முன்னாள் சோஷலிச கிழக்கு ஜெர்மனியில், எண்பதுகளில் நடக்கும் கதை ஒன்றை சொல்கின்றது. பெர்லின் நகரில் கடமையாற்றிய இளம் பெண் மருத்துவரான பார்பரா, விசாவுக்கு விண்ணப்பித்த காரணத்தால், புலனாய்வுத்துறையின் (Stasi) சந்தேகத்திற்கு ஆளாகின்றார். அதனால், தொலைதூரத்தில் உள்ள பால்ட்டிக் கடலோரம், ஒரு நாட்டுப்புற மருத்துவமனைக்கு இடம் மாற்றப் படுகின்றார்.
"சோஷலிச சர்வாதிகாரத்தை" வெறுக்கும் பார்பரா, தனது மேற்கு ஜெர்மன் காதலனின் உதவியுடன், நாட்டை விட்டு தப்பிச் செல்லத் திட்டமிடுகிறார். இறுதியில் மனம் மாறி, கிழக்கு ஜெர்மனியில் தங்கி விடுகிறார்.
பார்பரா, கிழக்கு ஜெர்மன் அரசையும், வாழ்க்கையையும் வெறுப்பதை, பார்பரா படம் முழுவதும் வெளிப்படுத்தி வருகிறார். ஓரிடத்தில், சோஷலிச அரசாங்கம் தனது இட மாற்றத்திற்கு கூறிய காரணத்தை விரக்தியுடன் கூறுகின்றார்: "உனது மருத்துவப் படிப்புக்கு தொழிலாளர்களும், விவசாயிகளும் செலவு செய்துள்ளனர். நீ அந்தக் கடனை அடைக்க வேண்டும்..." அதைக் கேட்கும், தலைமை மருத்துவர், "அந்தக் காரணம் தவறானது அல்லவே!" என்று பதிலளிக்கிறார்.
இந்தத் திரைப்படம் சோஷலிச ஜெர்மன் அரசுக்கு சார்பானது அல்ல. (2012 ஆம் ஆண்டு தயாரிக்கப் பட்டு வெளியானது.) "கம்யூனிச சர்வாதிகாரம்" பற்றிய, பல எதிர்மறையான காட்சிகள் உள்ளன. இருப்பினும், ஒரு நகரத்தில் பணியாற்றிய மருத்துவரை, நாட்டுப்புற மருத்துவ மனைக்கு இடம் மாற்றிய காரணம், படத்தில் அப்படியே பதிவு செய்யப் பட்டுள்ளமை இங்கே குறிப்பிடத் தக்கது.
குறிப்பாக, இலங்கையில் பல மருத்துவர்கள் மக்களின் வரிப் பணத்தில் படித்து முடித்தவுடன், நகர்ப்புறங்களில் தங்கி வேலை செய்கின்றனர். இந்தியாவைப் பற்றி சொல்லத் தேவையில்லை. எத்தனை மருத்துவர்கள், கிராமப்புற மக்களுக்கு சேவை செய்கின்றனர்?
ஒரு சோஷலிச நாட்டில், மக்களின் வரிப் பணத்தில் படித்த மருத்துவர்கள், அந்த மக்களுக்கு கடமைப் பட்டுள்ளதை உணர்த்துகின்றனர். அவர்களை வசதியான நகரங்களில் தங்க விடாது, வசதி குறைந்த கிராமங்கள், நாட்டுப்புற மருத்துவ மனைகளுக்கு அனுப்புகின்றனர்.
முன்னாள் சோஷலிச நாடுகளின் "சர்வாதிகாரம்" பற்றி, மேட்டுக்குடியினர் புலம்புவது இதனால் தான். இந்தியா, இலங்கை போன்ற வறிய நாட்டு மக்களின் வரிப் பணத்தில் படித்த மருத்துவர்கள், அந்த மக்களுக்கு சேவை செய்யாமல், அமெரிக்கா சென்று டாலர்களுக்காக வேலை செய்கின்றனர். அப்படிப் பட்ட அயோக்கியர்கள், கம்யூனிசத்தை வெறுப்பதில் என்ன அதிசயம் இருக்கிறது?
- கலையரசன்
கருத்துகள்
கருத்துரையிடுக