முன்னாள் கம்யூனிச கிழக்கு ஜெர்மனியை சேர்ந்த நண்பர் ஒருவர், எனக்கு கணனியின் பாகங்களை பகுதி பகுதியாக பிரித்துப் போட்டு, பின்னர் பொருத்தி முழுமையான கணணியாக்குவது எப்படி என்று காட்டித் தந்தார். பெர்லின் மதில் விழும் பொழுது, அவருக்கு பத்து வயதாக இருந்திருக்கலாம். அந்த நண்பர், தனது செயலை ஒரு உதாரணம் மூலம் புரிய வைத்தார்.
ஒரு முதலாளித்துவவாதி, பசியோடு இருக்கும் ஒருவனுக்கு மீனை சாப்பிடக் கொடுத்து விட்டு, பின்னர் அவன் கஷ்டப் பட்டு வேலை செய்து, மீன் வாங்கிச் சாப்பிட வேண்டுமென்று எதிர்பார்ப்பான். அதே நேரம், ஒரு பொதுவுடமைவாதி பசியோடு இருப்பவனுக்கு மீனைக் கொடுப்பதுடன், அவனாகவே மீன் பிடித்து உண்பது எப்படி என்றும் காட்டிக் கொடுப்பான்.
மக்களுக்கு எதையும் சொல்லிக் கொடுக்காமல், அறியாமையில் வைத்திருந்தால் தான், முதலாளி கோடி கோடியாக இலாபம் சம்பாதிக்க முடியும். "நமது தமிழ் மக்களுக்கு கம்யூனிசம் தேவையில்லை. இன்று யாருமே அதை பொருட் படுத்துவதில்லை. மக்கள் இடதுசாரிகளை வெறுக்கிறார்கள்..." என்றெல்லாம் மெத்தப் படித்த அறிவாளிகள் கூட உளறித் திரிகின்றார்கள்.
அவர்கள் மனதில் குடி கொண்டிருக்கும் அச்சம் தான், இந்த உளறலுக்கு காரணம். அவர்களிடம் மட்டுமே தேங்கிக் கிடக்கும் அறிவியல், அனைத்து மக்களையும் போய்ச் சேர்ந்து விட்டால், யார் அவர்களை மதிப்பார்கள்? அதற்குப் பின், கை நிறைய சம்பளம் வாங்கி, வாய் நிறைய உண்ண முடியுமா?
எதற்காக பெரும்பாலான நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள், கம்யூனிசத்தை வெறுக்கிறார்கள் என்பதற்கு, இதை விட வேறு உதாரணம் வேண்டுமா? ஐயோ பாவம். அவர்கள் தாங்கள் மட்டுமே உலகம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
******
சுற்றுச் சூழல் பாதுகாப்பில் முன்னணியில் திகழ்ந்த கிழக்கு ஜெர்மனி.இன்று உலகம் முழுவதும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு உருவாகி வருகின்றது. பாவித்து வீசிய பொருட்களை மீள்பாவனை செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மேற்கத்திய முதலாளித்துவ நாடுகள் கவனம் செலுத்துகின்றன.
ஆனால், முப்பது வருடங்களுக்கு முன்னரே, சோஷலிச கிழக்கு ஜெர்மனி சிறப்பாக நடைமுறைப் படுத்தி வந்தது. நாடு முழுவதும் மீள்பாவனைக்கான சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் இயங்கின. பாவித்து வீசப்படும் போத்தல்கள், தகரங்கள், கடதாசிகள் எல்லாவற்றையும் சேகரித்துக் கொடுப்போருக்கு சிறு தொகை சன்மானம் கொடுக்கப் பட்டது.
ஜெர்மன் ஒன்றிணைவுக்குப் பின்னர், அந்தத் தொழிற்சாலைகள் யாவும் மூடப்பட்டு விட்டன. ஏனென்றால், பொருட்களை மீள் பாவனைக்கு பயன்படுத்துவது "சோஷலிசம்" ஆகும்!
******
ஒரு மேற்கு ஜெர்மன் பிரஜையின் வாக்குமூலம்:
- எந்தக் காலத்திலும் உணவுத்தட்டுப்பாடு இருக்கவில்லை. யாரும் பட்டினியால் சாகவில்லை. வாழைப்பழம், விஸ்கி, கொக்கோ கோலா போன்ற வெளிநாட்டு இறக்குமதிப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியது.
- பாண் (Bread), உருளைக் கிழங்கு, பொதுப் போக்குவரத்து கிட்டத்தட்ட "இலவசமாக" கிடைத்தது. (விலை மிக மிகக் குறைவு). வீட்டு வாடகையும் மிக மிகக் குறைவு.
- தொட்டில் முதல் சுடுகாடு வரை, தனி மனிதனின் அனைத்து தேவைகளையும் அரசே நிறைவேற்றியது. விளையாட்டு, விடுமுறை, ஓய்வுநேர கேளிக்கைகளை அரசே ஒழுங்கு படுத்தியது.
- தெருவில் ஊதாரியாக திரியும் இளைஞர்களை காண முடியாது. கிரிமினல் குற்றங்கள் பற்றி யாருமே கேள்விப்படுவதில்லை.
- உங்களுக்கு உதவி செய்வதற்கு எந்நேரமும் யாராவது ஒருவர் இருந்தார். மக்களுக்கிடையில் ஒற்றுமையும், பரஸ்பர உதவி செய்யும் மனப்பான்மையும் இருந்தது. அதற்கு மாறாக, மேற்கு ஜெர்மனியில் எல்லோருமே சுயநலவாதிகளாக இருந்தார்கள்.
- Kalaiyarasan
The truth about the GDR
கிழக்கு ஜெர்மன் மக்கள், இப்போதும் சோஷலிச கடந்த காலம், "ஒரு பொற்காலம்" என்று நினைவுகூருகின்றனர். அண்மையில் எடுத்த கருத்துக் கணிப்பொன்றின் படி, 40% பேர், முன்னாள் சோஷலிச கிழக்கு ஜெர்மனியில் வாழ்க்கை சிறப்பாக இருந்தது என்று கூறுகின்றனர். பெர்லின் மதில் அப்படியே இருந்திருந்தால் எவ்வளவு நல்லது என்று ஏங்கும் பலரை, நீங்கள் இன்றைக்கும் கிழக்கு ஜெர்மனியில் காணலாம். இந்தத் தகவலை இத்தாலி இணையத் தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.
Germania, Ostalgie più forte che mai. Viaggio tra chi rivuole la Ddr
- Kalaiyarasan
https://www.youtube.com/watch?v=KTIC73lVZz8
கருத்துகள்
கருத்துரையிடுக