நடைமுறையில் உள்ள முதலாளித்துவ சமுதாய அமைப்பில், எல்லோரும் சுயநலவாதிகளாக இருக்க வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே போதிக்கப் படுகின்றது. ஒவ்வொருவரும் தனது நலன்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முதலாளித்துவ சமுதாயத்தில், ஒருவர் எந்தளவு பெரிய தவறு செய்தாலும் ஒத்துக் கொள்ளக் கூடாது. அது சரியென்று நியாயப் படுத்தி வாதாட வேண்டும். தனது தவறை வெளிப்படையாக ஒத்துக் கொள்பவன், "வாழத் தெரியாத முட்டாள்" என்று பரிகசிக்கப் படுகின்றான்.
ஆனால், சோஷலிச சமுதாயம் இதற்கு நேரெதிரானது. எல்லோரும் பொதுநலவாதிகளாக இருக்க வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே போதிக்கப் படுகின்றது. முன்னாள் சோஷலிச நாடுகளில், பாடசாலைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில், ஒவ்வொரு வாரமும் "சுயவிமர்சன ஒன்றுகூடல்" நடைபெறும். சுயவிமர்சன ஒன்றுகூடலில் கலந்து கொள்வது கட்டாயமாக்கப் பட்டிருந்தது.
ஒவ்வொருவரும் தன்னைத் தானே விமர்சனம் செய்து கொள்ள வேண்டும். தான் விட்ட பிழைகளை முதலில் கூற வேண்டும். சிலநேரம் அது சக மாணவன், சக தொழிலாளிக்கு எதிரான பொறாமை பற்றியதாக கூட இருக்கலாம்.
இதிலே முக்கியமானது என்னவென்றால், ஒருவர் தனது தவறுகளை பகிரங்கமாக சுய விமர்சனம் செய்து விட்ட பின்னர், அவரால் பாதிக்கப் பட்ட நபர் அந்த இடத்திலேயே மன்னித்து விட வேண்டும். ஒருவர் தனது தவறை ஒத்துக் கொண்ட பின்னர், அதைக் குத்திக் காட்டிப் பேசக் கூடாது. அந்த இடத்திலேயே மறந்து விட வேண்டும்.
முன்னாள் சோஷலிச நாடுகளில் நடந்த "சுய விமர்சனக் கூட்டங்கள்", சிலநேரம் ஒரு சடங்கு மாதிரி பின்பற்றப் பட்டு வந்தது. அதாவது, எல்லோரும் வெளிப்படையாக உண்மை பேசுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. சிலநேரம், குறிப்பிடத் தக்க எதுவும் செய்யாதவர் கூட, கற்பனைக் கதை ஒன்றைக் கூறுவார்.
பொதுவாக, சாதாரண மக்களின் நடத்தை, எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரித் தான் இருக்கும். ஆனால், இதன் மூலம் பரஸ்பரம் மன்னிப்பும், தோழமை உணர்வும் பேணப் படுவதே முக்கியமானது. சிலநேரம், இதைப் பார்த்தால், கத்தோலிக்க தேவாலயத்தில் பின்பற்றப் படும் பாவ மன்னிப்பு போன்று இருக்கும்.
ஆனாலும் வித்தியாசமும் உள்ளது. "கடவுளின் தொடர்பாளரான" பாதிரியாரிடம் பாவமன்னிப்பு கேட்பதற்கு பதிலாக, இங்கே மக்கள் நேரடியாகவே ஒருவருக்கொருவர் மன்னிப்புக் கோருகின்றார்கள். எல்லோரும் தவறு செய்கிறார்கள். ஆனால், அது பாவம் அல்ல என்ற தன்னம்பிக்கை உருவாகின்றது.
கருத்துகள்
கருத்துரையிடுக