"ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதை, உலக நாட்டு மக்கள் அத்தனை பேரும் கண்டிக்க வேண்டும்" என்று எதிர்பார்க்கும் தமிழ் இன உணர்வாளர்கள், அதனை மேற்கத்திய சட்டங்களுக்கு உட்பட்டு நடைமுறைக்கு கொண்டு வர முடியாது. அவர்கள் முன்னாள் சோஷலிச கிழக்கு ஜெர்மனியில் இருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.
மேற்கத்திய முதலாளித்துவ நலன் சார்ந்த சட்டம் எதுவும், இனப்படுகொலைகளை தடுப்பதற்காக எழுதப் பட்டதல்ல. மிகவும் பிரபலமான, நியூரன்பேர்க் நீதிமன்றம் கூட, மிகவும் குறைந்தளவு நாஸி குற்றவாளிகளுக்கு மட்டுமே தண்டனை வழங்கியது. யூத இனப்படுகொலையில் ஈடுபட்ட பெரும்பான்மையான நாஸிகள், அமெரிக்காவிலும், பிற மேலைத்தேய நாடுகளிலும் சுகபோக வாழ்க்கை வாழ்ந்தார்கள். இது எப்படி சாத்தியமாயிற்று? சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி தப்பினார்கள் என்று சாமானியர்களின் மொழியில் கூறலாம்.
உண்மையில், மேற்கத்திய சட்டம் எப்போதும் ஆதாரங்களை வைத்துக் கொண்டு தான் தண்டனை வழங்கும். ஆதாரம், சாட்சிகள் இல்லாவிட்டால், எந்தக் குற்றவாளியும் தப்பி விடலாம். இதனால், சோஷலிச நாடாக இருந்த கிழக்கு ஜெர்மனியில் ஒரு புதிய சட்டத் திருத்தம் கொண்டு வந்தார்கள். ஒருவர் தனது "மனச் சாட்சிக்கு விரோதமாக நடந்தாலும் குற்றம் தான்" என்ற சட்டம், விசேடமாக நாஸிஸ ஒழிப்பிற்காக இயற்றப் பட்டது. "சுடச் சொல்லி உத்தரவு வந்ததால் சுட்டேன்... என்னிடம் நிறைவேற்று அதிகாரம் இருக்கவில்லை... எனது கடமையை மட்டும் செய்தேன்..." யாரும் இவ்வாறு சொல்லித் தப்ப முடியாது. அதாவது, மனச் சாட்சிக்கு விரோதமான காரியத்தை செய்வதும் குற்றமாகும்.
மேற்கு ஜெர்மனியை விட, கிழக்கு ஜெர்மனியில் தான் இனப்படுகொலை குற்றச்சாட்டில் பெருமளவு நாஸிகள் தண்டிக்கப் பட்டனர். நாசிசம் முற்றாக அழித்தொழிக்கப் பட்டது. ஆனால், மேற்கு ஜெர்மனியில்? முன்னாள் நாஸிகள் பலர் சுதந்திரமாகத் திரிந்தனர். அரசாங்கத்தில் மட்டுமல்லாது, நிறுவனங்கள், கல்விச்சாலைகள் எல்லா இடங்களிலும் இனப்படுகொலை குற்றவாளிகளான முன்னாள் நாஸிகள் தொடர்ந்தும் பதவிகளில் அமர்ந்திருந்தார்கள். கிழக்கு ஜெர்மனியில் நாஸிகளுடன் தொடர்புடைய கொள்கைகள் அனைத்தும், சட்டம் போட்டு தடை செய்யப் பட்ட பின்னர் தான் மேற்கு ஜெர்மனியும் தன் பங்கிற்கு சில மாற்றங்களை கொண்டு வந்தது.
மேற்கு, கிழக்கு ஜெர்மனிகள் இரண்டிலும், "யூத இனப்படுகொலை நடக்கவில்லை என்று மறுப்பது" ஒரு தண்டனைக்குரிய குற்றம் ஆகும். இன்றைக்கும் ஒன்றிணைந்த அந்த சட்டம் அமுலில் உள்ளது. அதனால் தான் அங்கே ஜெர்மன் தேசியவாத சக்திகள், அரசியலில் மிகவும் பலவீனமாக உள்ளன.
- கலையரசன்
கருத்துகள்
கருத்துரையிடுக