வட கொரியாவில் இந்த அழகான வீடு உங்களுக்கு முற்றிலும் இலவசமாகக் கிடைக்கிறது. வாடகையும் அதிகமில்லை. இரண்டு மாதம் வாடகை கட்டவில்லை என்ற காரணத்திற்காக யாரும் உங்களைப் பிடித்து தெருவில் விட மாட்டார்கள். இங்கே "வாடகை" என்பது பராமரிப்பு செலவுகளுக்கானது. பெரும்பாலும் புதிய வீட்டுமனைகள் எல்லாம் அடுக்குமாடிக் குடியிருப்புகள் என்பதால் பராமரிப்புச் செலவுகளும் அதிகம். அது அங்கு குடியிருக்கும் அனைவராலும் பகிர்ந்து கொள்ளப் படுகிறது.
தொண்ணூறுகளுக்கு முன்னர் வட கொரியாவில் சோஷலிச அமைப்பு இருந்த காலத்தில் எழுதப்பட்ட சட்டம் இப்போதும் அமுலில் உள்ளது. ஒவ்வொரு குடும்பமும் தனியாக வீடு கிடைப்பதற்கான வசதிகளை அரசே செய்து கொடுக்கும். ஒரு குடும்பம் புதிய வீடொன்றுக்கு குடிபுகும் பொழுது "ipsajung" (குடிபுகுந்த பத்திரம்) எனும் பத்திரம் வழங்கப் படும்.
ipsajung பத்திரத்தில் "வசிப்பதற்கான அனுமதி" என்று தான் எழுதப் பட்டுள்ளது. ஆனால் காலாவதியாகும் திகதியோ, அல்லது குறிப்பிட்ட காலத்திற்கான ஒப்பந்தமோ அல்ல. ஆகையினால் மக்கள் தாம் "சொந்த வீட்டில்" வசிப்பதாக நம்பி வந்தனர். இன்று வரையில் யாரும் வீட்டை விட்டு வெளியேற்றப் படவில்லை என்பதால், மக்கள் அப்படி நம்பியதிலும் தவறில்லை.
முன்பிருந்த சோஷலிச காலகட்டத்தில் யாரும் தாம் குடியிருக்கும் வீட்டை விற்க முடியாது. ஏதாவது தேவையென்றால் இன்னொருவருடன் வீட்டை மாற்றிக் கொள்ளலாம். சம்பந்தப்பட்ட இருவரும் நகரசபைக்கு சென்று பத்திரத்தில் உள்ள பெயரை மாற்றிக் கொண்டால் அது சட்டப்படி செல்லுபடியாகும்.
தற்காலத்தில் முதலாளித்துவ பொருளாதாரம் வந்த பின்னர் வீடுகளை வாங்குவதும் விற்பதும் அதிகரித்து வருகின்றது. பியாங்கியாங் நகரில் ஒரு இலட்சம் யூரோக்களும் வீடு விற்பனைக்கு விடப் படுகிறது. ஆனால், வட கொரியாவின் வீட்டு உரிமைச் சட்டம் மாற்றப் படாத காரணத்தால், வீடு விற்பதும், வாங்குவதும் சில நேரம் எதிர்காலத்தில் சட்ட ரீதியான பிரச்சனைகளை கொண்டு வரலாம். இருப்பினும், தற்போதைய வட கொரிய அரசாங்கம், முதலாளித்துவ நடவடிக்கைகளை கண்டும் காணாத மாதிரி விட்டுக் கொடுப்பதால், பலர் அதைப் பற்றிக் கவலைப் படுவதில்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக