இதோ நாஜி இந்தியாவின் அடுத்த கட்ட அடக்குமுறை: தடுப்பு முகாம்கள்!
இது அசாமில் தங்கியுள்ள பங்களாதேஷ் குடியேறிகளுக்கு எதிரானது மட்டுமல்ல. இந்த தடுப்பு முகாம்கள் நாளைக்கு நாடு முழுவதும் கட்டப் படலாம். தமிழகத்தில் வாழும் ஈழத் தமிழ் அகதிகளும் அதற்குள் அடைக்கப் படலாம். அது மட்டுமல்ல, நாளைக்கு அரசு நினைத்தால், யாரை வேண்டுமானாலும் ஏதாவதொரு சாட்டுக் கூறி குடியுரிமையை பறித்து தடுப்பு முகாமுக்கு அனுப்பலாம்.
அசாம் மாநிலத்தில் பல தசாப்தகாலமாக தங்கியிருந்து இந்தியப் பொருளாதாரத்திற்கு பங்களிப்புச் செய்த தொழிலாளர்களைத் தான், பாஜக நாஜிகளின் கொடுங்கோல் அரசு ஈவிரக்கமின்றி தடுப்பு முகாமிற்கு அனுப்புகிறது. ஏழை பாமரத் தொழிலாளர்கள், பிறப்புச் சான்றிதழ் போன்ற அரச ஆவணங்கள் வைத்திருக்காத காரணத்தை காட்டி, தடுப்பு முகாமுக்குள் அடைத்து வைக்கவிருக்கிறது.
இவ்வாறு தான் நாஜி ஜெர்மனியின் அடக்குமுறை ஆட்சி ஆரம்பமாகியது. பிரெஞ்சு, இத்தாலி போன்ற பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஜெர்மனியில் குடியேறியவர்கள் ஜெர்மன் குடியுரிமை பெறும் வாய்ப்பை இல்லாதொழித்தது. அப்படியான "சட்டவிரோத குடியேறிகளுக்காகவே" தடுப்பு முகாம்கள் கட்டப் படுவதாக ஒரு நியாயம் கூறியது. பிரஜாவுரிமை என்பது பிறப்பின் அடிப்படையிலானது என்று சட்டத்தை மாற்றியமைத்தது. அதைத் தான் பாஜக நாஜிகளின் அரசு இந்தியாவில் செய்கிறது.
நாஜி அரசினால் ஜெர்மன் யூதர்களின் குடியுரிமை பறிக்கப் பட்ட போதிலும், அவர்களை எடுத்தவுடனே தடுப்பு முகாம்களுக்கு அனுப்பவில்லை. முதலில் "கெட்டோ" எனும் குறிப்பிட்ட பரப்பளவு கொண்ட பிரதேசத்திற்குள் மட்டும் வாழும் வகையில் அவர்களது நடமாட்டம் கட்டுப் படுத்தப் பட்டது. யூதர்களுக்கு முன்னரே கம்யூனிஸ்டுகள், இடதுசாரிகள் போன்ற "விரும்பத்தகாத பிரஜைகளின்" குடியுரிமை பறிக்கப் பட்டு தடுப்பு முகாம்களில் அடைக்கப் பட்டிருந்தனர்.
குடியுரிமை பறித்தலும், தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்தாலும் இறுதியில் இனப்படுகொலையில் சென்று முடிந்தது என்பது வரலாறு. உண்மையில், அன்றைய காலகட்டத்தில் "Endlösung" எனப்படும் இனப்படுகொலை குறித்த தீர்மானம் எடுப்பதற்கு நீண்ட காலம் எடுத்தது. அது வரையில் தடுப்பு முகாம்கள் தேசப் பாதுகாப்புக்கு அவசியமானவை என்று தான் ஜெர்மன் மக்கள் நம்ப வைக்கப் பட்டிருந்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக