இனவாதம், இஸ்லாமோபோபியாவுக்கு காரணம் மக்களின் அறியாமை. வேற்றினத்தவருடன் கலந்து பழகும் வாய்ப்புக் கிடைத்தால் தப்பெண்ணம் விலகும் என்பதை விளக்கும் செய்திக் கட்டுரை ஒன்று The New York Times (21 September 2019) இல் பிரசுரமாகியுள்ளது. மனிதநேயம் உள்ள சாதாரண மக்கள் "எதிரி" இனத்தவருடனும் நட்புடன் பழகுவார்கள். இதற்கு உதாரணமாக முன்னாள் கிழக்கு ஜேர்மனியில் ஒரு கிராமம் நடைமுறையில் நிரூபித்துக் காட்டியுள்ளது.
2015 ம் ஆண்டு ஜேர்மனியில் போலந்து எல்லைக்கு அருகில் உள்ள கொல்ஸோவ் (Golzow) கிராமத்தில் 16 சிரிய அகதிக் குடும்பங்கள் குடியமர்த்தப் பட்டன. ஆரம்ப காலங்களில் இருந்த சந்தேகங்கள், அவநம்பிக்கைகள் மறைந்து, தற்போது அங்கு எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.
கடந்த தேர்தல்களில் கொல்ஸோவ் கிராமவாசிகளில் நான்கில் ஒருவர், அகதிகள், இஸ்லாமியருக்கு எதிரான இனவாதம் பேசும் AfD கட்சிக்கு வாக்களித்தனர். அதற்காக அந்த மக்கள் "இனவாதிகள்" என்று அர்த்தமல்ல. அரசியல் வேறு, யதார்த்தம் வேறு.
தமது கிராமத்திற்கு சிரிய முஸ்லிம் அகதிகள் வரப் போகிறார்கள் என்று கேள்விப் பட்டதும், முதலில் பல கிராமவாசிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். "ஒரு வித்தியாசமான மதத்தை பின்பற்றுகிறார்கள், ஜேர்மன் கலாச்சாரத்துடன் ஒன்றுபட்டு வாழ மாட்டார்கள், திருட்டு மற்றும் பல குற்றச்செயல்களில் ஈடுபடுவார்கள்...." என்று பல தப்பெண்ணங்களை கொண்டிருந்தார்கள்.
அதே நேரம், சிரிய அகதிகளிடமும் தப்பெண்ணங்கள் இருந்தன. "முன்னாள் கிழக்கு ஜேர்மனியா? அங்குள்ளவர்கள் வெளிநாட்டவர்களை வெறுக்கிறார்கள். மிகவும் ஆபத்தான இடம்." என்று நண்பர்கள் பயமுறுத்தி இருந்தனர். ஜேர்மன் அரசு குறிப்பிடும் இடத்தில் அகதிகள் குடியமர வேண்டும் என்பதால் அரை மனதுடன் வந்து சேர்ந்தனர்.
சிரிய அகதிகள் கொல்ஸோவ் கிராமத்திற்கு வந்து வாழத் தொடங்கியதும், இரு தரப்பிலும் இருந்த தப்பெண்ணங்கள் மறைந்து விட்டன. இரண்டு மாறுபட்ட சமூகங்களும் மனிதர்களாக ஒன்று சேர்ந்து வாழலாம் என அனுபவத்தில் இருந்து கற்றுக் கொண்டனர்.
அகதிகள் வருகைக்கு பிறகு, பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்த கொல்ஸோவ் கிராமத்தில் புதிய வேலைவாய்ப்புகள் உண்டாகின. வெறுமையாக இருந்த வீடுகளில் அகதிகள் குடியமர்ந்தனர். பாடசாலைக்கு புதிய மாணவர்கள் கிடைத்தனர்.
சிரிய அகதிப் பிள்ளைகளுக்கு ஜேர்மன் நண்பர்கள் கிடைத்தனர். அவர்களின் தந்தை மார் வேலைக்கு போவதுடன், ஜேர்மன்காரர்களுடன் சேர்ந்து வீட்டுத் தோட்டம் செய்தல், மீன் பிடித்தல் போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடுகின்றனர். தாய் மார் அங்கு நடக்கும் பண்டிகைகளில் சிரிய உணவு வகைகளை பரிமாறுகின்றனர். சுருக்கமாக, எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.
சிரிய அகதிகளுக்கும் தமக்கும் இடையில் சில அதிசயத்தக்க ஒற்றுமைகள் இருப்பதை கொல்ஸோவ் வாசிகள் அறிந்து கொண்டனர். இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் போலந்தில் இருந்து அடித்து விரட்டப்பட்டு வந்தவர்கள் தான் அந்தக் கிராமத்தில் குடியேறி உள்ளனர். அதாவது ஒரு காலத்தில் அவர்களும் போரினால் பாதிக்கப் பட்டு இடம்பெயர்ந்த அகதிகள் தான். இன்றைக்கும் வயோதிபர்கள் கிரனேட் குண்டு சத்தத்தை நினைவுகூர்கின்றனர். சிரிய அகதிகள் போன்று தாங்களும் ஒரே மாதிரியான கடந்த காலத்தை கொண்டவர்கள் என்ற உணர்வு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே கொல்ஸோவ் கிராமம் ஒரு தொலைக்காட்சித் தொடர் மூலம் பிரபலமாகியது. அறுபதுகளில், அது கம்யூனிச கிழக்கு ஜேர்மனியாக இருந்த காலத்தில் ஓர் ஆவணப் படம் தயாரிக்கப் பட்டது. "இரும்புத்திரைக்குப்" பின்னால் உள்ள சோஷலிச நாடுகளில் வாழும் மக்கள் "சர்வாதிகார" ஆட்சியின் கீழ் "துன்பப் படுகிறார்கள்" என்று மேற்குலகில் பிரச்சாரம் செய்யப் பட்டது.
கம்யூனிச நாடுகள் குறித்த மேற்குலக பொய்ப் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் "கொல்ஸோவின் பிள்ளைகள்" என்ற ஆவணப் படம் அமைந்திருந்தது. அதாவது, உலகின் பிற நாடுகளில் நடப்பது மாதிரி, இங்கு வாழும் மக்களும் உண்டு, களித்து, பண்டிகை கொண்டாடி வாழ்கையை அனுபவிக்கும் சாதாரண மக்கள் தான் என்பதை நிரூபித்த படம். அந்த உண்மை மீண்டும் அகதிகள் விடயத்திலும் நிரூபிக்கப் பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக