காஷ்மீரில் ஒரு கிராமத்தில், இந்திய இராணுவம் வீடு வீடாகச் சென்று ஆண் பிள்ளைகள் அனைவரையும் பிடித்து வந்து, ஒரு பொது இடத்தில் இருத்தி வைத்திருக்கும் காட்சி.
1987 ம் ஆண்டு, யாழ்ப்பாணத்தில் இருந்த எனக்கும் இதே மாதிரியான அனுபவம் கிடைத்தது. அப்போது எங்களது கிராமத்தை சுற்றிவளைத்த இந்திய இராணுவம், ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று ஆண் பிள்ளைகள் எல்லோரையும் வெளியே வரச் சொன்னார்கள். எங்கள் எல்லோரையும் அங்கிருந்த ஆரம்பப் பாடசாலை முற்றத்தில் அமர வைத்தார்கள். பின்னர் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த இராணுவ முகாமிற்கு கொண்டு சென்று ஒரு நாள் முழுவதும் வைத்திருந்தார்கள்.
அந்த இராணுவ முகாமும் ஒரு பாடசாலைக் கட்டிடம் தான். எங்களை எல்லாம் வகுப்பறை மண்டபங்களில் வெறும் தரையில் படுக்க வைத்தார்கள். அப்போது அவர்கள் இரவுணவாக தந்த காய்ந்து போன சப்பாத்தியும், தண்ணீர் மாதிரியான சாம்பாரும் இப்போதும் நினைவில் உள்ளது. அடுத்த நாள், சந்தேகத்திற்கிடமான ஒரு சிலரை மட்டும் தடுத்து வைத்துக் கொண்டு மற்றவர்களை விடுதலை செய்தார்கள்.
எங்கள் ஊரில் இருந்த பெரும்பாலான வீடுகளில் அன்று பெண்கள் மட்டும் தனியாக இருந்தார்கள். அனேகமாக பதினைந்து முதல் நாற்பது வரையிலான ஆண்கள் அனைவரையும் பிடித்துச் சென்று விட்டார்கள். ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டு செல்வது மாதிரி, முன்னும் பின்னும் துப்பாக்கி ஏந்திய படையினர் எங்களை இரண்டு கிலோமீட்டர் நடத்திக் கூட்டிச் சென்றார்கள்.
அன்று நாங்கள் அனுபவித்த வலிகளை இன்று காஷ்மீரி சகோதரர்கள் அனுபவிப்பதைக் காணும் பொழுது மனம் கனக்கிறது. இந்தப் படத்தை பார்க்கும் பொழுது, காஷ்மீருக்கும் ஈழத்திற்கும் இடையில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக