இலங்கையில் தற்போது தீவிரமடைந்துள்ள மத/இன முரண்பாடுகளுக்கு பின்னால் உள்ளதும் வர்க்கப் பிரச்சினை தான். அதை ஓர் உதாரணம் மூலம் விளக்கலாம்.
மதவாதம், இனவாதம் எல்லாம் வர்க்க முரண்பாடுகளை மறைப்பதற்கான முகமூடிகள் தான். தன் நாட்டு மக்கள் எல்லோரும் அந்த முகமூடிகளை வாங்கி அணிய வேண்டுமென்று ஆளும் வர்க்கம் விரும்புகிறது. இதற்கென தயாராக இருக்கும் இனவாத அறிவுஜீவிகள், ஊடகங்கள், சமூக வலைத்தலங்களில் நச்சுக் கருத்துக்களை பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்கள் படிப்பறிவு குறைந்த பாட்டாளிவர்க்க மக்களை இனவாதக் கருத்துக்களால் மூளைச் சலவை செய்கின்றனர்.
அண்மையில் வட மேல் மாகாணத்தில் நடந்த முஸ்லிம் விரோத கலவரங்களில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் சிங்கள அடித்தட்டு மக்கள். அதாவது, லும்பன்கள் எனப்படும் உதிரிப் பாட்டாளி வர்க்கத்தினர். முஸ்லிம்களின் வீடுகள், கடைகளை கொளுத்தி, அங்கிருந்த பொருட்களை சூறையாடியுள்ளனர். ஒரு தொழிற்சாலையில் வேலை செய்த தொழிலாளர்களே சீருடையில் சென்று கொளுத்தி உள்ளனர்.
அவசர காலச் சட்டம் அமுலில் இருந்தாலும், வன்முறையில் ஈடுபட்ட பலரைக் கைது செய்த போலிஸ் அடுத்த நாளே விடுதலை செய்தது. சில இடங்களில் அரசியல்வாதிகள் நேரில் சென்று விடுவித்துள்ளனர். பல குற்றவாளிகளை CCTV கமெரா மூலம் அடையாளம் காணக் கூடியதாக இருந்தும் பொலிஸ் அவர்களை கைது செய்யவில்லை.
சற்றுப் பின்னோக்கிப் பார்ப்போம். ஓரிரு வருடங்களுக்கு முன்னர் கூட இதே வட மேல் மாகாணத்தில், இதே அடித்தட்டு மக்கள் சுற்றுச் சூழல் மாசடைதலை எதிர்த்துப் போராட்டம் நடத்தினார்கள். கொழும்பிலும் இதர பகுதிகளிலும் மாணவர்கள் இலவசக் கல்வி உரிமைக்காக போராடினார்கள்.
அப்போதெல்லாம் இதே பொலிஸ் ஒடுக்குமுறைக் கருவியாக செயற்பட்டது. சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அடித்து உதைத்து மண்டை உடைத்தது. கைது செய்யப் பட்டவர்களை ஒரு வருடமாக கூட சிறையில் அடைத்து வைத்திருந்தனர்.
சிங்கள அடித்தட்டு மக்களில் ஒரு பிரிவினர் இனவெறியுடன் கலவரத்தில் ஈடுபட்ட நேரம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஊக்குவித்த அதிகார வர்க்கம், அதே மக்கள் வர்க்க உணர்வுடன் அமைதி வழியில் போராடிய நேரம் அடக்குமுறை பிரயோகித்தது.
இதன் மூலம் சிறிலங்கா அரசு மக்களுக்கு சொல்ல விரும்பும் செய்தி இது தான்: "மக்களே! தாராளமாக இனவாதம் பேசுங்கள். இலங்கையில் இனவாத நோக்கில் நடத்தப் படும் வன்முறைகளுக்கு தண்டனை கிடையாது. ஆனால், நீங்கள் வர்க்க உணர்வுடன் உரிமைகளைக் கேட்டால் அடக்கி ஒடுக்கப் படுவீர்கள்."
ஆகவே, நீங்கள் உரிமைகளற்ற முட்டாள்தனமான இனவாதிகளாக இருக்கப் போகிறீர்களா? அல்லது, உரிமைகளுக்காக போராடும் தன்மானமுள்ள வர்க்கவாதிகளாக இருக்கப் போகிறீர்களா? முடிவு உங்கள் கைகளில்...
கருத்துகள்
கருத்துரையிடுக