இலங்கையில் 19 ம் நூற்றாண்டின் இறுதியில் நடந்த முதலாவது சிங்கள- முஸ்லிம் கலவரம் பற்றிய வரலாற்றுத் தகவல் ஒன்றை Sarawanan Komathi Nadarasa தினக்குரல் பத்திரிகையில் கட்டுரையாக பதிவு செய்துள்ளார். அதில் ஒரு சுவாரஸ்யமான தகவல் உள்ளது.
பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளரின் தலைநகரமான கொழும்பு நகரில், மருதானை பகுதியில் இந்தக் கலவரம் நடந்துள்ளது. அப்போது போலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்தவர் ஓர் ஆங்கிலேயர். அவர் பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்து நேர்மையாக நடந்து கொண்டுள்ளார்.
அந்த ஆங்கிலேய போலிஸ் பொறுப்பதிகாரி, அன்று தீவிரமாக கலவரத்தில் ஈடுபட்ட சில முஸ்லிம்களை கைது செய்துள்ளார். அதில் மூன்று பேர் "வெள்ளையின ஐரோப்பியர்கள்"! உண்மையில் அவர்கள் தான் கலவரம் தீவிரமடைய காரணமாக இருந்துள்ளனர்!! ஒருவர் ஜேர்மனிய யூதர். மற்றைய இரண்டு பெரும் இஸ்லாமியராக மதம் மாறியிருந்த ஆங்கிலேயர்கள்.
இதிலிருந்து ஓர் உண்மை தெளிவாகின்றது. ஆங்கிலேய காலனிய ஆட்சியாளர்கள், பிரித்தாளும் உத்தியை பயன்படுத்தியே தமது காலனிகளை நிர்வகித்துள்ளனர். அதன் விளைவுகளை நாங்கள் இப்போதும் அனுபவிக்கிறோம்.
இலங்கையில் பௌத்த- சிங்களப் பேரினவாதத்தின் தந்தையாக கருதப்படும் ஒல்கொட் பிரபு பௌத்த மதத்திற்கு மாறியிருந்த ஆங்கிலேயர். அவர் தான் பௌத்த மத அடிப்படைவாதக் கருத்துக்களுக்கும் வித்திட்டவர். இப்போதும் சிங்களப் பௌத்தர்கள் அவருக்கான மரியாதை கொடுக்கின்றனர்.
அதே மாதிரி, இஸ்லாமியராக மதம் மாறியிருந்த ஆங்கிலேயர்கள் முஸ்லிம்களை ஒரு தனித்துவமான இனமாக்குவதற்கான பங்களிப்பை செய்திருக்கலாம். இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தின் தோற்றமும் அவர்களிடம் இருந்து வந்திருக்கலாம்.
உதாரணத்திற்கு, அந்தக் காலகட்டத்தில் வட இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ஜமாஅத் ஏ இஸ்லாமி இயக்கம் ஓர் மிதவாத மத அடிப்படைவாத அமைப்பு தான். அதன் தோற்றத்திற்குப் பின்னாலும் பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள் இருந்துள்ளனர்.
இன்றைய பாகிஸ்தானில் வேரிட்டுள்ள ஜமாஅத் ஏ இஸ்லாமி, எகிப்தில் தோன்றிய முஸ்லிம் சகோதரத்துவம் போன்ற மத அடிப்படைவாத அமைப்புகள் எல்லாம் ஆங்கிலேய காலனிய விசுவாசிகளால் தான் உருவாக்கப் பட்டன. இவர்கள் காலனிய ஆட்சியை எதிர்த்து எதுவும் செய்யவில்லை. மாறாக ஒத்துழைத்தனர். இந்து மத அடிப்படைவாத ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும் அப்படித் தான்.
பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக் காலம் முழுவதும், உளவாளிகளை உற்பத்தி செய்து அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அன்று பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு போட்டியாக இருந்த ரஷ்யா மற்றும் பிரெஞ்சு வல்லரசுகளின் விஸ்தரிப்பை முறியடிப்பதற்கு உளவாளிகள் பயன்பட்டனர்.
அதே நேரம், காலனிகளில் வாழ்ந்த இனங்களை பிரித்து மோத வைப்பதற்கும் உளவாளிகள் தேவைப்பட்டனர். இதற்கென சிறப்புப் பயிற்சி பெற்ற ஆங்கிலேய உளவாளிகள் உள்ளூர் மொழியை சரளமாக பேசக் கூடியவர்களாக இருந்தனர். அது மட்டுமல்ல, இந்துவாக, இஸ்லாமியராக, பௌத்தராக மதம் மாறி உள்நாட்டு மக்களின் நம்பிக்கையை பெற்றிருந்தனர். இதற்கு உலகம் முழுவதும் நிறைய உதாரணங்களை காட்டலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக