பாகிஸ்தானில் குவாடர் துறைமுக நகரத்தில் உள்ள Pearl Continental எனும் ஆடம்பர ஹொட்டேலில், இம்மாதம் நடந்த (பயங்கரவாத) துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் ஒரு கடற்படையினர் உட்பட 5 பேர் கொல்லப் பட்டனர். பலுசிஸ்தான் விடுதலை இயக்கத்தின் (BLA) மஜீத் அணி தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது.
அதிகளவு ஊடக கவனத்தை கவராத இந்தத் தாக்குதல், நவீன துறைமுக நகரமான குவாடரில் பெருமளவு படையினர் குவிக்கப் பட்டுள்ள பாதுகாப்பு வலையத்தினுள் நடந்துள்ளது.
சில வருடங்களுக்கு முன்னர், நகருக்கு வெளியே பேருந்து வண்டிகளில் சென்ற பாதுகாப்புப் படையினரும், சீன தொழிலாளர்களும் வழி மறித்து சுட்டுக் கொல்லப் பட்டனர்.
கடந்த வருடம் கராச்சி நகரில் உள்ள சீன துணைத் தூதரகத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில், சீன விசாவுக்கு விண்ணப்பித்த இரண்டு பொது மக்களும், பாதுகாவலருமாக நான்கு பேர் கொல்லப் பட்டனர்.
ஏன் இந்த சம்பவங்கள் பொதுவாக சர்வதேச ஊடகங்களில் அறிவிக்கப் படுவதில்லை? அதற்குக் காரணம் இந்தத் தீவிரவாதத் தாக்குதல்கள் பாகிஸ்தானில் உள்ள சீன இலக்குகளை குறி வைத்து நடத்தப் படுகின்றன.
எதிரி நாட்டுக்கு எதிரான தாக்குதல்கள் "நல்ல பயங்கரவாதம்" எனப் படும். அதனால் அமெரிக்காவும், இந்தியாவும் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கின்றன. ஊடகங்களும் நமக்கு இதைத் தெரிவிக்காமல் மௌனம் சாதிக்கின்றன.
குவாடர் நகரம் பலுசிஸ்தானில் உள்ளது. அதனை இலங்கையில் உள்ள அம்பாந்தோட்டையுடன் ஒப்பிடலாம். அங்கும் பில்லியன் கணக்கான சீன முதலீட்டில் ஒரு நவீன துறைமுகமும், விமான நிலையமும் கட்டப் பட்டுள்ளன. சர்வதேச கடல் வழியாக நடக்கும் எரிபொருள் போக்குவரத்தை கருத்தில் கொண்டு தான் பாகிஸ்தானில் குவாடரிலும், இலங்கையில் அம்பாந்தோட்டையிலும் சீனா முதலிட்டுள்ளது.
குறிப்பாக குவாடர் துறைமுகம் உள்ள பகுதி, பாகிஸ்தானில் பலுச்சி சிறுபான்மையின மக்களின் பிரதேசம் ஆகும். பாகிஸ்தான் அரசு பலுசிஸ்தான் மாகாணத்தில் எந்த அபிவிருத்தியும் செய்யாமல் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வைத்திருக்கிறது.
ஒரு காலத்தில் சிறிய மீன்பிடி துறைமுகத்தை மட்டும் கொண்டிருந்த குவாடர், தற்போது துபாய் போன்று நவீன நகரமாக மாறிக் கொண்டிருக்கிறது. அதனால் ஆதாயமடைவோர் இஸ்லாமாபாத்திலும், கராச்சியிலும் வாழும் அரசியல் தலைவர்களும், இராணுவ அதிகாரிகளும் தான். பலுச்சி மக்களுக்கு எந்த நன்மையும் கிடைப்பதில்லை.
நீண்ட காலமாக, தனி நாடு கோரி பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்தும் BLA, சில வருடங்களுக்கு முன்னர் சீன ஆக்கிரமிப்பாளர்களையும் வெளியேற்றுவதற்காக போராடுவதாக அறிவித்துள்ளது. அதற்காகவே மஜீத் அணி என்ற தற்கொலைப் படையும் உருவாக்கப் பட்டது.
ஒவ்வொரு வருடமும் பலுச்சி தீவிரவாதிகளின் தாக்குதல்களும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. ஆனால், சீனாகுக்கு குவாடரில் இருந்து வெளியேறும் நோக்கம் கிடையாது. அந்தளவுக்கு பெருந்தொகைப் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக