"கிம் தேசம்" தெரிந்தவர்களுக்கு "சாம்சுங் தேசம்" தெரியுமா? வட கொரியாவில் நடக்கும் மன்னராட்சி பற்றி பாடம் நடத்துவோருக்கு, தென் கொரியாவில் நடக்கும் கம்பனி ஆட்சி கண்ணில் படாததேன்?
அண்மையில் தான், தென்கொரியாவை ஆண்ட பழமைவாதக் கட்சிப் பிரதமர் பதவி விலகி தேர்தல் நடந்தது. சாம்சுங் நிறுவனம் சம்பந்தப் பட்ட ஊழல் குற்றம் நிரூபிக்கப் பட்டதால், மக்கள் எழுச்சிக்குப் பின்னர் பதவி விலகினார்.
இன்று உலகம் முழுவதும் விற்பனையாகும் மின்னணு சாதனங்களை தயாரிக்கும் சாம்சுங் கம்பனியை அறியாதவர் எவருமில்லை. ஆனால் அந்தக் கம்பனி தென் கொரியாவை ஆளும் அளவிற்கு வளர்ந்துள்ளது என்பது பலருக்குத் தெரியாது.
தென் கொரியாவில் எங்கு பார்த்தாலும் சாம்சுங் மயமாக இருக்கும். சாம்சுங் விளையாட்டுக் கழகம், சாம்சுங் மருத்துவ மனை, சாம்சுங் பல்கலைக்கழகம், சாம்சுங் துறைமுகம்..... இப்படி முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கும். தென் கொரிய பொருளாதாரத்தின் பெரும் பகுதி சாம்சுங் கையில் உள்ளது.
பல்லாயிரக் கணக்கான தென்கொரியர்கள் சாம்சுங் நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள். "நல்ல சம்பளம், போனஸ்" கிடைக்கிறது என்பதற்காக பலர் திருப்திப் படலாம். ஆனால் அதற்குப் பின்னால் உள்ள அவலங்கள் வெளியே தெரிவதில்லை.
நாளொன்றுக்கு 14 மணிநேரம் வேலை செய்வது அங்கே சர்வ சாதாரணம். வேலைப்பளு, பிற கெடுபிடிகள் காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்கள் பலருண்டு.
சாம்சுங் நிறுவனத்தின் 75 வருட கால வரலாற்றில் தொழிற்சங்கம் அமைக்க அனுமதிக்கவில்லை. தொழிலாளர்களின் நீண்ட கால போராட்டத்தின் பின்னர், சில வருடங்களுக்கு முன்னர் தான் அனுமதித்தார்கள்.
தொழிற்சங்கத்தை உருவாக்கிய தொழிலாளர் தலைவர் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார். அது ஒரு கொலையாக இருக்கலாமா? அதை விசாரிக்கப் போவது யார்? அரசும், காவல்துறையும் சாம்சுங் நிறுவனத்திற்கு விசுவாசமாக இருக்கும் நாட்டில் உண்மை வெளிவரும் என்று எதிர்பார்க்கலாமா?
(தகவல்: அவுஸ்திரேலிய SBS தொலைக்காட்சி ஆவணப்படம்.)
- Kalaiyarasan
கருத்துகள்
கருத்துரையிடுக