படம் பார், பாடம் படி!
வந்தேறி அமெரிக்கப் பெண்ணின் கொலைவெறிக்கு பலியான பூர்வீக பாலஸ்தீனப் பெண்.
இஸ்ரேல்- பாலஸ்தீனப் பிரச்சினையானது, இன்றைக்கும் தொடரும் ஒரு மேற்கத்திய காலனிய ஆக்கிரமிப்புப் போர். அதனால் தான், அங்கு நடக்கும் இனப்படுகொலை, போர்க் குற்றங்களுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் பூரண ஆதரவு வழங்குகிறது.
ஒரு மருத்துவ தொண்டராக, கான் யூனிஸ் (காஸா) போராட்டக் களத்தில் காயமுற்றவர்களுக்கு உதவிய, ரஸான் அல் நஜார் என்ற இருபத்தியொரு வயது பாலஸ்தீன இளம்பெண் இஸ்ரேலிய படையினரால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார். தொலைநோக்கி பொருத்தப் பட்ட சினைப்பர் துப்பாக்கியால், பட்டப் பகலில் குறிபார்த்து நெஞ்சில் சுட்டுள்ளனர். இது இஸ்ரேலிய படையினரின் போர்குற்றம் என்பதில் எந்த சந்தேகத்திற்கும் இடமில்லை.
இந்தப் போர்க்குற்றம் உலகம் முழுவதும் கண்டனங்களை எழுப்பி வரும் நேரத்தில், அமெரிக்கா இஸ்ரேலுக்கு எதிரான விமர்சனங்களை அடக்கியொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஐ.நா. பாதுகாப்புச் சபையில், காஸா போராட்டக் காரர்களை பாதுகாக்க வேண்டுமென்ற தீர்மானம் கொண்டு வரப் பட்ட நேரம், அமெரிக்கா மட்டுமே எதிர்த்து வாக்களித்தது. ஐ.நா. சபையில் அமெரிக்க பிரதிநிதியாக கையை உயர்த்தியவரும் நிக்கி ஹெய்லி என்ற ஒரு பெண் தான்.
இதற்கிடையே இன்னொரு முக்கியமான தகவலையும் குறிப்பிட வேண்டும். பாலஸ்தீன மருத்துவ தாதி ரஸான் அல் நஜாரை சுட்டுக் கொன்ற இஸ்ரேலிய இராணுவ வீராங்கனை ரெபேக்கா ஓர் அமெரிக்கர்! அமெரிக்காவில் பொஸ்டன் நகரில் பிறந்து வளர்ந்த, ஒரு அமெரிக்கப் பிரஜையான ரெபெக்கா, தனது பதினெட்டாவது வயதில் இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்து வந்து இராணுவத்தில் சேர்ந்து கொண்டவர்.
இஸ்ரேலிய சட்டத்தின் படி, ஒரு யூதர் உலகில் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், இஸ்ரேலில் குடியேறும் உரிமை பெற்றிருக்கிறார். அப்படியான வந்தேறிகளுக்கு உடனடியாகவே இஸ்ரேலிய குடியுரிமையும், கடவுச்சீட்டும் கிடைத்து விடும். அதே நேரம், இன்றைய இஸ்ரேலிய தேசத்திற்குள் அடங்கும் பாலஸ்தீனர்கள், அந்த மண்ணில் ஆயிரம் வருடங்கள் வாழ்ந்திருந்தாலும் குடியுரிமை கிடையாது.
பாலஸ்தீனர்கள் ஒரு பக்கம் தாம் வாழ்ந்த மண்ணை இழந்து கொண்டிருக்கிறார்கள். அதே நேரம், அவர்கள் இன்றைக்கும் நாடற்றவர்களாக இருப்பதால், ஒரு சாதாரண பிரஜைக்குரிய உரிமைகளும் மறுக்கப் படுகின்றன. அவர்கள் சட்ட பூர்வமாக இஸ்ரேலிய தேச எல்லைகளுக்குள் வாழ்ந்தாலும், இஸ்ரேலிய பிரஜைகளாக அங்கீகரிக்கப் படவில்லை. அதே நேரம், அவர்களுக்காக பாலஸ்தீனம் என்ற தேசத்தை பிரிக்கவும் இஸ்ரேலிய அரசு தயாராக இல்லை.
இது முன்பு தென்னாப்பிரிக்காவில் இருந்த அப்பார்ட்ஹைட் என்ற இனவாத நிர்வாக அமைப்பின் இஸ்ரேலிய வடிவம் ஆகும். தென்னாபிரிக்காவிலும் வந்தேறிகளான ஐரோப்பியர்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப் பட்டிருந்தன. ஆனால், பூர்வ குடிகளான ஆப்பிரிக்கர்கள் எந்த உரிமையும் இல்லாமல் இருந்தனர்.
இஸ்ரேல் "யூதர்களின் தாயகம்" என்று வெளியில் பிரச்சாரம் செய்யப் பட்டாலும், அந்த யூதர்களில் பெரும்பான்மையானோர் ஐரோப்பிய குடியேறிகள் தான். யூத மதத்தை பின்பற்றினாலும், அவர்கள் வெள்ளையின ஐரோப்பியர்கள் என்பதால் தான், அமெரிக்க ஏகாதிபத்தியம் ஐ.நா.விலும் இஸ்ரேலை பாதுகாக்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக