நடைமுறையில் உள்ள முதலாளித்துவ பொருளாதாரப் பிரச்சினைகளை திசைதிருப்பும் வகையில், அதற்குள் இனவாதத்தை நுழைத்து பிழைப்பு அரசியல் நடத்துவதில் தமிழினவாதிகள் மகா கில்லாடிகள்.
யாழ் வடமராட்சி கிழக்கு கரையோரத்தில் சிங்கள, முஸ்லிம் மீனவர்கள் அத்துமீறி வந்து மீன்பிடிக்கிறார்கள் என்று, சில தினங்களுக்கு முன்னர் இனவாதிகள் சர்ச்சையை கிளப்பி விட்டனர். அவர்கள் சட்டவிரோத மீன்பிடிப்பில் ஈடுபடுகின்றனர். எமது பிரதேச வளங்களை சுரண்டுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டி இருந்தனர்.
அந்த சம்பவம் குறித்து தமிழினவாதிகள் மேற்கொண்டு தெரிவித்த கருத்து இது: "சிங்கள- முஸ்லிம் மீனவர்கள் ட்ரோலர் படகுகள், மற்றும் நவீன கடற்றொழில் உபகரணங்களை பாவிக்கிறார்கள். வடமராட்சி கிழக்குப் பிரதேச தமிழ் மீனவர்களிடம் அந்தளவு வசதி இல்லை" என்றும் கூறினார்கள். அதாவது, இது பொருளாதார வசதி சம்பந்தப் பட்ட விடயம் என்பதை அவர்களே ஒத்துக் கொள்கிறார்கள்.
இலங்கையில் வாழும் சிங்கள, முஸ்லிம் மீனவர்கள் எல்லோரும் பணக்காரர்கள் என்பது போலவும், தமிழ் மீனவர்கள் எல்லோரும் ஏழைகள் என்பது போலவும் கறுப்பு வெள்ளையாகப் பார்ப்பது சிறுபிள்ளைத்தனமானது. என்ன செய்வது? இனவாதிகளுக்கு எப்போதும் "குழந்தை மனசு". அவர்களால் இனம் தாண்டி எதையும் சிந்திக்க முடியாது.
வட மாகாண சபை உறுப்பினரான சிவாஜிலிங்கம், சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று பேசிய பொழுது சில உண்மைகள் தெரிய வந்தன. உண்மையில், வடமராட்சி கிழக்கு கரையோரத்தை சேர்ந்த தமிழ் முதலாளி ஒருவர் தான், சிங்கள- முஸ்லிம் தொழிலாளர்களை கொண்டு வந்து கடலட்டை பிடிக்கும் தொழிலில் வேலைக்கு அமர்த்தி உள்ளார். அவரே தனது காணிக்குள் குடிசைகளை போட்டுக் கொடுத்து, அவர்களை தங்க வைத்துள்ளார்.
சிவாஜிலிங்கம் ஏற்கனவே இந்து மத அடிப்படைவாதம் பேசி சர்ச்சைக்குள் மாட்டுப் பட்டவர். அவருடன் சைக்கிள் கட்சியை (TNPF) சேர்ந்தவர்களும் அந்த இடத்திற்கு சென்றிருந்தனர். கடலட்டை பிடிக்கும் தொழிலை உடனடியாக நிறுத்தா விட்டால், "குடிசைகளை கொளுத்துவோம்" என்று, வன்முறையை தூண்டும் வகையில் சிவாஜிலிங்கம் பேசினார்.
அவர்கள் அங்கு சட்டவிரோத மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருப்பதாக இனவாதிகள் குற்றம் சாட்டி இருந்தனர். ஆனால், சட்டப் படி தொழில் செய்வதற்கான அனுமதிப் பத்திரங்கள் தன்னிடம் இருப்பதாக, சம்பந்தப் பட்ட தமிழ் முதலாளி காட்டியுள்ளார். இலங்கை நீரியல் வள நிறுவனம் வழங்கிய, அந்த அனுமதியை இரத்து செய்ய வேண்டும் என்று, மருதங்கேணி பிரதேச சபை செயலகத்தில் நடந்த கூட்டத்தில் சிலர் கேட்டுக் கொண்டனர்.
சம்பந்தப் பட்ட தமிழ் முதலாளி, எதற்காக வேறு பிரதேசங்களில் இருந்து தொழிலாளர்களை கொண்டு வந்தார் என்று கேட்கலாம். சிலநேரம் உள்ளூரில் ஆட்கள் கிடைக்காமல் இருக்கலாம். அப்படிக் கிடைத்தாலும் அவர்கள் அதிக கூலி கேட்கலாம். ஆகவே, குறைந்த கூலியில் அதிக உழைப்பை கொடுக்க தயாரான மலிவு விலைக் கூலிகளை கொண்டு வந்திருக்கலாம்.
யாழ் மாவட்டத்திற்குள் வந்து வேலை செய்யும் மலிவு விலைக் கூலிகள், சிங்களவர்களாகவும், முஸ்லிம்களாகவும் இருப்பது தமிழினவாதிகளின் கண்களை உறுத்தும் விடயம். இந்தப் பிரச்சினையை அவர்கள் சம்பந்தப் பட்ட தமிழ் முதலாளிகளிடம் எழுப்பலாம். ஆனால், செய்ய மாட்டார்கள். ஏனென்றால், இதே தமிழினவாதிகளும் தமிழ் முதலாளிகளின் பணத்தை எதிர்பார்த்து அரசியல் நடத்துபவர்கள் தான்.
ஈழத்தில் இனவாத அரசியல் நடத்தி உழைக்கும் மக்களை பிரித்து வைப்பதற்காக சிலர் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். வட இலங்கையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணி (TNPF) என்ற ஒரு கட்சி, தென்னிலங்கை சிங்கள இனவாதத்திற்கு போட்டியாக, வட இலங்கையில் தமிழினவாதத்தை வளர்க்கும் செயற்பாடுகளில் மும்முரமாக ஈடுபடுகின்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற இனவாதக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் ஒரு பெருந்தோட்ட முதலாளி. யாழ்ப்பாணத்தில் பிரபலமான தமிழ் கோடீஸ்வரர் குடும்பத்தை சேர்ந்தவர். அவரது சொத்து மதிப்பு எவ்வளவு என்ற விபரம் தெரிவிக்கப் படுவதில்லை. இனவாதத்திற்கும், முதலாளித்துவத்திற்கும் இடையிலான தொடர்பை அறிந்து கொள்வதற்கு இதை விட வேறு விளக்கம் தேவையில்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக