முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உளவாளிகளின் பாலம் (Bridge of Spies) - சினிமா விமர்சனம்


பனிப்போர் காலத்தில் நடந்த சம்பவங்களை வைத்து, ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் "Bridge of Spies" திரைப்படத்தை எடுத்துள்ளார். முதலில் கதைச் சுருக்கம்: 1957 ம் ஆண்டு, நியூ யோர்க் நகரில், சோவியத் யூனியனுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் Rudolf Abel என்ற ஆசாமி கைது செய்யப் படுகின்றார்.

 நீதிபதி உட்பட, அமெரிக்க அரசு அதிகாரிகள், கண்துடைப்பு விசாரணை ஒன்றுக்குப் பின்னர், அந்த உளவாளிக்கு மரண தண்டனை வழங்க விரும்புகின்றனர். அணுவாயுத பீதியூட்டப் பட்ட அமெரிக்க பொது மக்களும், தேசத் துரோகியை தூக்கில் போடத் துடிக்கின்றனர்.

இதற்கிடையே வழக்கறிஞர் டோனோவன், குற்றஞ் சாட்டப் பட்டவருக்கு ஆதரவாக வழக்கில் ஆஜராகின்றார். ஆரம்பத்திலேயே தீர்ப்பு இதுதான் என்பதை முடிவு செய்து விட்ட நீதிபதியிடம், நைச்சியமாகப் பேசி, மரண தண்டனையை நீக்கி, சிறைத் தண்டனை வாங்கிக் கொடுக்கிறார். அதற்கு அவர் கூறும் காரணம் முக்கியமானது: "சோவியத் யூனியனிடம் நமது உளவாளிகள் மாட்டி இருக்கலாம். அவர்களை விடுதலை செய்வதற்கு ரூடால்ப் ஆபெலை துருப்புச் சீட்டாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

எதிர்பார்த்த படியே, சோவியத் யூனியன் மேல் உளவு பார்ப்பதற்காக பறந்து சென்ற விமானி Francis Gary Powers அங்கே மாட்டிக் கொள்கிறார். CIA தலைவர் டல்லாஸ், டோனோவனை அழைத்துப் பேசுகின்றார். உளவாளிகளை மாற்றிக் கொள்வதற்கான இராஜதந்திர முயற்சிகளில் தனியாக ஈடுப்படுமாறு கூறுகின்றார். வக்கீல் டோனோவன் அதற்கு இணங்குகிறார்.

இதற்கிடையே இன்னொரு பிரச்சினை உருவாகின்றது. கைதிகள் பரிமாற்றம் குறித்து பேசுவதற்காக, டோனோவன் பெர்லின் செல்லும் நேரம் தான், பெர்லின் மதில் கட்டப் பட்டுக் கொண்டிருக்கிறது. அங்கு படித்துக் கொண்டிருந்த அமெரிக்க மாணவன் Frederic Pryor, கிழக்கு பெர்லினில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப் படுகின்றார்.

ஒரு பக்கம் சோவியத் தூதுவராலயம், இன்னொரு பக்கம் கிழக்கு ஜெர்மன் அரசு. இரண்டு தரப்பினரும் கைதிகள் விடுதலைக்கு தமது பக்க நிபந்தனைகளை முன்வைக்கிறார்கள். ஒரு விதமாக, இரண்டு தரப்பினரையும் இணங்க வைத்து, டோனோவன் இரண்டு அமெரிக்கர்களையும் விடுவித்துக் கொண்டு வருவது தான் கதை.

இந்தத் திரைப்படம் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப் பட்டாலும், எல்லா விடயங்களும் படத்தில் காட்டிய மாதிரி நடக்கவில்லை. பல கட்டங்களாக நடந்த இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை, இலகு படுத்துவதற்காக ஒரே இடத்தில் நடந்ததாக காட்டப் படுகின்றது.

அமெரிக்கா U-2 உளவு விமானங்களை அனுப்பி, சோவியத் யூனியன் மீது உளவு பார்த்த விடயம் கடந்த நூற்றாண்டில் மறைக்கப் பட்டு வந்தது. முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போல, அமெரிக்க அரசு உலகிற்கு பொய் சொல்லிக் கொண்டிருந்தது. ஆனால், இந்தத் திரைப்படம் உளவு விமான விவகாரம் உண்மை தானென்பதை நிரூபிக்கின்றது.

உண்மைச் சம்பவங்களை வைத்து எடுக்கப் பட்ட படமென்பதால், அரசியல் பிரச்சாரம் செய்வதும் கஷ்டமல்லவா? அதனால், ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் வேண்டுமென்றே சில காட்சிகளை திணிக்கிறார். சோவியத் யூனியனிலும், கிழக்கு ஜெர்மனியிலும் கைதிகள் மிகவும் மோசமாக நடத்தப் படுவதாக சித்தரிக்கிறார்.

வானில் இருந்து உளவு பார்த்து படமெடுத்த விமானியிடம் உண்மையை சொல்லுமாறு சோவியத் அதிகாரிகள் சித்திரவதை செய்கிறார்கள். ஆனால், அமெரிக்காவில் கைது செய்யப் பட்ட சோவியத் உளவாளியை யாரும் அடித்துத் துன்புறுத்தவுமில்லை! அமெரிக்க அரசுக்காக உளவு பார்த்தால், விடுதலை செய்து பணமும் தருவதாக ஆசை காட்டிப் பார்க்கும் அளவிற்கு நல்லவர்கள்! சோவியத் யூனியனுக்கு துரோகம் செய்ய ஒத்துக் கொள்ளாத காரணத்தினால், ரூடால்ப் ஆபெல் மரண தண்டனையை எதிர்நோக்கிக் காத்திருந்திருக்கிறார்.

வழக்கறிஞர் டொனோவன் கிழக்கு பெர்லினுக்குள் செல்லும் நேரம், சட்டவிரோதமாக பெர்லின் மதில் ஏறிப் பாய முனைந்தவர்கள் சுட்டுக் கொல்லப் படுவதை நேரில் காண்கிறார். பல தசாப்த கால மேற்கத்திய பிரச்சாரத்தை, ஸ்பீல்பெர்க் தனது படத்தில் காட்சிப் படுத்தியுள்ளார். அவ்வளவு தான்.

இன்றைக்கு, சட்டவிரோதமாக ஐரோப்பாவுக்குள் நுழைய முனையும் அகதிகள், எல்லைகளில் நூற்றுக் கணக்கில் சுட்டுக் கொல்லப் படுவதைப் பற்றி யாருக்கும் அக்கறை இல்லை. மேற்கத்திய நாட்டினருக்கு, அன்று பெர்லின் மதில் கடந்தவர்கள் மட்டுமே அகதிகள்.

இந்தப் படத்தின் கதை, இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் வந்த பத்தாண்டுகளுக்குப் பிறகு நடக்கின்றது. அதனால், போரினால் ஏற்பட்ட பாதிப்புகள் அப்போதும் காணக்கூடியதாக இருந்திருக்கும். ஆனால், அதிலும் பாரபட்சம் தெரிகின்றது. மேற்கு பெர்லின் காட்டப்படும் காட்சிகளில், ஆடம்பரமான பொருட்களை விற்பனை செய்யும் கடைத்தெருவை காட்டுகிறார்கள். அதே நேரம், கிழக்கு பெர்லினில் கட்டிடங்கள் எல்லாம் இடிந்து போய்க் கிடக்கின்றன.

பெர்லின் மதில் எல்லை கடந்து வரும் வழக்கறிஞர் டொனோவன், கிழக்கு பெர்லின் தெருவொன்றில் தனியாக நடந்து செல்கிறார். அது பனிபொழியும் குளிர் காலம். விலையுயர்ந்த கனத்த மேலங்கி அணிந்து செல்லும் டொனோவன், கூட்டமாக நிற்கும் கிழக்கு ஜெர்மன் இளைஞர்கள் மறித்து, அந்த மேலங்கியை கழற்றித் தருமாறு கேட்கிறார்கள்.

இந்தக் காட்சி மூலம், டைரக்டர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க், கிழக்கு ஜெர்மன் மக்கள், விலையுயர்ந்த பொருள் எதையும் கண்ணால் கண்டிராத அளவுக்கு, வறுமையில் வாடியதாக காட்ட விரும்புகிறார். இரண்டாம் உலகப்போரினால் ஏற்பட்ட அவலம், கிழக்கு பெர்லினை மட்டும் பாதித்திருந்ததா? மேற்கு பெர்லின் மக்கள் வசதியாக வாழ்ந்தார்களா?

இது போன்ற காட்சியமைப்பு, ஒரு தலைப்பட்சமான அரசியல் பிரச்சாரமாகத் தெரிகின்றது. இங்கே டைரக்டர் ஒரு வரலாற்று உண்மையை மறைக்கிறார். உண்மையில், மேற்கு பெர்லினை சுற்றித் தான் மதில் கட்டப் பட்டது. அதன் அர்த்தம், முற்றுகைக்குள் வாழ்ந்த மேற்கு ஜெர்மன் மக்கள் தான் பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக கஷ்டப் பட்டனர்.

இதுவும் ஒரு சராசரி அமெரிக்கத் திரைப்படம் என்பதால், பிரதானமான கதாபாத்திரங்களும் அமெரிக்கர்கள் தான். தவிர்க்கவியலாது, அமெரிக்க அரசின் எதிர்மறையான பக்கங்களையும் காட்ட வேண்டியுள்ளது.

- கைது செய்யப்பட்ட உளவாளி ஓர் அந்நிய நாட்டுப் பிரஜையாக இருந்தாலும், உளவு பார்த்த குற்றச்சாட்டு நிரூபிக்கப் படாமலே மரண தண்டனை விதிப்பதில் காட்டப்படும் அவசரம். குற்றஞ்சாட்டப் பட்டவரின் நியாயத்திற்காக வாதாட வேண்டாம் என்று, நீதிபதியே வழக்கறிஞரை தனியாக அழைத்து மிரட்டும் அராஜகம்.

- சர்வதேச சட்டத்திற்கு முரணாக, சோவியத் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் அமெரிக்க U-2 வேவு விமானங்கள். விமானிகள் எதிரியிடம் அகப்பட்டால் தற்கொலை செய்ய வேண்டுமென்பதற்காக கொடுக்கப்பட்ட சயனைட் ஊசிகள்.

- CIA அனுப்பிய விமானிகளும், இராஜதந்திரிகளும் எதிரி நாட்டில் சிறைப் பிடிக்கப் பட்டால், தனக்குத் தெரியாது என்று கைகழுவி விடும் போக்கு.

- இரகசிய உளவு நடவடிக்கைகள், அதில் ஈடுபடுத்தப் படும் அமெரிக்கர்களின் உயிராபத்துக்கள், இது பற்றிய எந்த விபரத்தையும் அறிவிக்காமல் மூடி மறைக்கும் அமெரிக்க அரசு.

இப்படிப் பல சம்பவங்களை குறிப்பிடலாம். ஒரு வேளை, இவற்றைப் பார்க்க நேரும் இரசிகர்கள், அமெரிக்காவை பற்றி கூடாமல் நினைத்து விட்டால்? அதை மறைக்கும் நோக்கில், சோவியத் யூனியன், கிழக்கு ஜெர்மனியில் நடக்கும் கொடுமைகளை விரிவாக எடுத்துக் கூற வேண்டாமா? ஸ்பீபன் ஸ்பீல்பெர்க் என்ன லேசுப் பட்ட ஆளா?


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கொரியா- சாம்சுங் தேசம்

"கிம் தேச‌ம்" தெரிந்த‌வ‌ர்க‌ளுக்கு "சாம்சுங் தேச‌ம்" தெரியுமா? வ‌ட‌ கொரியாவில் ந‌ட‌க்கும் ம‌ன்ன‌ராட்சி ப‌ற்றி பாட‌ம் ந‌ட‌த்துவோருக்கு, தென் கொரியாவில் ந‌ட‌க்கு‌ம் க‌ம்ப‌னி ஆட்சி க‌ண்ணில் ப‌டாத‌தேன்?  அண்மையில் தான், தென்கொரியாவை ஆண்ட‌ ப‌ழ‌மைவாதக் க‌ட்சிப் பிர‌த‌ம‌ர்  ப‌த‌வி வில‌கி தேர்த‌ல் ந‌ட‌ந்த‌து. சாம்சுங் நிறுவ‌ன‌ம் ச‌ம்ப‌ந்த‌ப் ப‌ட்ட‌ ஊழ‌ல் குற்ற‌ம் நிரூபிக்க‌ப் ப‌ட்ட‌தால், ம‌க்க‌ள் எழுச்சிக்குப் பின்ன‌ர் ப‌த‌வி வில‌கினார். இன்று உல‌க‌ம் முழுவ‌தும் விற்ப‌னையாகும் மின்ன‌ணு சாத‌ன‌ங்க‌ளை தயாரிக்கும் சாம்சுங் க‌ம்ப‌னியை அறியாத‌வ‌ர் எவ‌ருமில்லை. ஆனால் அந்த‌க் க‌ம்ப‌னி தென் கொரியாவை ஆளும் அள‌விற்கு வ‌ள‌ர்ந்துள்ள‌து என்ப‌து ப‌ல‌ருக்குத் தெரியாது.  தென் கொரியாவில் எங்கு பார்த்தாலும் சாம்சுங் ம‌ய‌மாக‌ இருக்கும். சாம்சுங் விளையாட்டுக் க‌ழ‌க‌ம், சாம்சுங் ம‌ருத்துவ‌ ம‌னை, சாம்சுங் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம், சாம்சுங் துறைமுக‌ம்..... இப்ப‌டி முடிவில்லாம‌ல் சென்று கொண்டிருக்கும். தென் கொரிய‌ பொருளாதார‌த்தின் பெரும் ப‌குதி சாம்சுங் கையில் உள்ள‌து.  ப‌ல்லாயிர‌க்...

சோஷலிச சமுதாயம் பொதுநலவாதிகளை உருவாக்குகிறது

நடைமுறையில் உள்ள முதலாளித்துவ சமுதாய அமைப்பில், எல்லோரும் சுயநலவாதிகளாக இருக்க வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே போதிக்கப் படுகின்றது. ஒவ்வொருவரும் தனது நலன்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முதலாளித்துவ சமுதாயத்தில், ஒருவர் எந்தளவு பெரிய தவறு செய்தாலும் ஒத்துக் கொள்ளக் கூடாது. அது சரியென்று நியாயப் படுத்தி வாதாட வேண்டும். தனது தவறை வெளிப்படையாக ஒத்துக் கொள்பவன், "வாழத் தெரியாத முட்டாள்" என்று பரிகசிக்கப் படுகின்றான். ஆனால், சோஷலிச சமுதாயம் இதற்கு நேரெதிரானது. எல்லோரும் பொதுநலவாதிகளாக இருக்க வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே போதிக்கப் படுகின்றது. முன்னாள் சோஷலிச நாடுகளில், பாடசாலைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில், ஒவ்வொரு வாரமும் "சுயவிமர்சன ஒன்றுகூடல்" நடைபெறும். சுயவிமர்சன ஒன்றுகூடலில் கலந்து கொள்வது கட்டாயமாக்கப் பட்டிருந்தது. ஒவ்வொருவரும் தன்னைத் தானே விமர்சனம் செய்து கொள்ள வேண்டும். தான் விட்ட பிழைகளை முதலில் கூற வேண்டும். சிலநேரம் அது சக மாணவன், சக தொழிலாளிக்கு எதிரான பொறாமை பற்றியதாக கூட இருக்கலாம்.  இதிலே முக்கியமானது என்னவென்...