இது முன்னாள் சோவியத் குடியரசான கசகஸ்தான் நாட்டில் உள்ள கரகன்டா (Karaganda) நகரம். இது ஸ்டாலின் காலத்தில் குலாக் (Gulag) சிறை முகாமாக இருந்தது என்றால் நம்ப முடிகிறதா? கிட்டத்தட்ட குவைத் நாடு அளவு பரப்பளவை கொண்ட, வெறும் புல்தரை நிலத்தில் அமைக்கப் பட்ட குலாக் முகாம்களில், இலட்சக் கணக்கான "வர்க்க விரோதிகளை" கொண்டு வந்து தடுத்து வைத்திருந்தனர்.
அவர்கள் கடும் உழைப்பினால் கட்டியெழுப்பியது தான் இந்தப் பிரமாண்டமான நகரம். நிலக்கரி சுரங்கம் பிரதானமான தொழிற்துறையாக இருந்தது.
ஆரம்ப காலத்தில் நிலைமை மோசமாகத் தான் இருந்தது. கட்டாய வேலை, உணவுப் பற்றாக்குறை எல்லாம் இருந்தது. ஆனால் அது இரண்டாம் உலகப் போர் முடியும் வரை தான்.
அப்போது குலாக் முகாம்களில் குறிப்பிடத்தக்க அளவு "போர்க் கைதிகளும்" இருந்தனர். உலகப் போரில் "ஜேர்மன் நாஸிப் படையெடுப்பாளர்களை ஆதரித்தார்கள்" என்ற குற்றச்சாட்டில், சோவியத் மேற்குப் பிரதேசங்களில் இருந்து வெளியேற்றப் பட்ட தேசிய இனங்களையும் கரகண்டாவில் தான் மீள்குடியேற்றம் செய்திருந்தனர்.
காலப்போக்கில் மெல்ல மெல்ல கரகண்டா நகரம் கட்டியெழுப்பப் பட்ட பின்னர், முன்னாள் சிறைக் கைதிகள், அதாவது வர்க்க எதிரிகளும் நன்மை அடைந்தனர். பொருளாதார முன்னேற்றம் காரணமாக பலர் "தாயகம் திரும்ப மனமின்றி" அங்கேயே தங்கி விட்டனர். அவர்களது வம்சாவளியினர் கரகண்டாவை புதிய தாயகமாக ஏற்றுக் கொண்டு விட்டனர்.
ஸ்டாலின் காலத்தில், ரஷ்யர்கள், ஜேர்மனியர்கள், உக்ரைனியர்கள், போலிஷ், என்று பல்வேறு இனங்களை சேர்ந்த மக்கள் இடம்பெயர்க்கப் பட்டு கரகண்டாவில் மீள்குடியேற்றம் செய்யப் பட்டனர். இப்போதும் அங்கே குறைந்தது 50 தேசிய இனங்களை சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள். சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் பின்னர் பெருமளவு ஜேர்மன் இனத்தவர்கள் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்து விட்டனர்.
- கலையரசன்
கருத்துகள்
கருத்துரையிடுக