ஆப்கானிஸ்தான், தாஜிகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள சிறிய நகரம் இஷ்காஷிம் (Ishkashim). 19 நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், பிரிட்டிஷ், ரஷ்ய வல்லரசுகளுக்கு இடையிலான மேலாதிக்கப் போட்டி காரணமாக இரண்டாகப் பிரிக்கப் பட்டது. ஒரு ஆற்றுக்கு வடக்கே இருந்த பகுதி ரஷ்யாவுடனும், தெற்கே இருந்த பகுதி ஆப்கானிஸ்தானுடனும் சேர்க்கப் பட்டது.
அதற்குக் காரணம், அன்றைய காலத்தில் காலனிய விஸ்தரிப்பில் ஈடுபட்டிருந்த பிரிட்டிஷ் இந்தியாவும், ரஷ்ய சாம்ராஜ்யமும் ஒரே எல்லையில் சந்தித்துக் கொண்டன. இரண்டு சாம்ராஜ்யங்களுக்கும் இடையிலான நீண்ட எல்லைப் பகுதி தனியாக பிரிக்கப் பட்டு, ஆப்கானிஸ்தானுடன் இணைக்கப் பட்டது. இதற்காக அங்கு வாழ்ந்த மக்களின் விருப்பத்தை யாரும் கேட்கவில்லை. ஒரே கிராமங்கள் ஒரே இரவில் இரண்டாகப் பிரிக்கப் பட்டன.
அவ்வாறு பாதிக்கப் பட்ட பகுதி தான் இஷ்காஷிம். தாஜிக்கி மொழியுடன் தொடர்புடைய கிளை மொழி ஒன்றைப் பேசுகின்றனர். கடந்த ஒரு நூற்றாண்டுக் காலமாக, ஒரே நகரத்து மக்கள் இரண்டு வெவ்வேறு நாடுகளில் வாழ்கிறார்கள். ஒரு ஆறு மட்டுமே அவர்களைப் பிரிக்கிறது. ஒரு பாலம் மட்டுமே அவர்களை இணைக்கிறது. வாரத்திற்கு ஒரு தடவை கூடும் சந்தையில், இரு பக்கத்து மக்களும் கலந்து கொள்வார்கள். அவ்வளவு தான். மற்றும் படி வேறெந்த பொதுவான தொடர்புகளும் கிடையாது.
ரஷ்ய சாம்ராஜ்யம் வீழ்ந்து அங்கு ஒரு சோஷலிசப் புரட்சி நடந்தது. அதனால், தாஜிகிஸ்தான் நாட்டை சேர்ந்த இஷ்காஷிம் நகரம், புதிதாக தோன்றிய சோவியத் யூனியனின் பகுதியானது. அதுவே சோவியத் ஒன்றியத்தின் தெற்கில் உள்ள கடைசி நகரம். ஆகையால், சோஷலிசம் கொண்டு வந்த மாற்றங்கள் அங்கேயும் கிடைக்கும் வகை செய்யப் பட்டது. மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள் போன்ற அனைத்து அத்தியாவசிய வசதிகளும் செய்து கொடுக்கப் பட்டன.
சோவியத் யூனியன் வீழ்ந்த பின்னர், தாஜிகிஸ்தான் தனியான குடியரசானது. இருப்பினும் சோவியத் காலத்து கட்டுமானம் இப்போதும் அங்கே இயங்கிக் கொண்டிருப்பதைக் காணலாம். இன்னமும் அங்கே லெனின் சிலை உள்ளது. "தங்கள் வாழ்வில் ஒளியேற்றிய மகான்" என்று உள்ளூர் மக்கள் இப்போதும் லெனினுக்கு மரியாதை செலுத்துகின்றனர். (நம்பாதவர்கள் நேரில் சென்று பார்க்கலாம்.)
இன்றைக்கும் தாஜிக் - இஷ்காஷிம் பிள்ளைகள் சோவியத் காலத்து சீருடையுடன் பள்ளிக்குச் செல்கின்றனர். பள்ளிக்கூடங்கள் ஒழுங்காக நடக்கின்றன. கல்வி கற்க வேண்டிய வயதில் உள்ள மாணவர்கள் ஒழுங்காக பாடசாலைக்கு சமூகமளிக்கின்றனர். தற்போதுள்ள தாஜிகிஸ்தான் ஒரு முதலாளித்துவ நாடு தான். இருப்பினும், கம்யூனிசம் கொண்டு வந்த சமுதாய மாற்றங்கள் அப்படியே உள்ளன. இஸ்லாமியவாதக் குழுக்களை தவிர வேறு யாரும் அதற்கு எதிரானவர்கள் அல்ல.
ஒரு கிலோ மீட்டர் வித்தியாசம் கூட இல்லாத தூரத்தில் உள்ள ஆப்கான்- இஷ்காஷிம் நகரத்தில் இன்னமும் ஒழுங்கான மருத்துவமனையோ, பள்ளிக்கூடமோ கிடையாது. அங்கிருக்கும் ஒன்றிரண்டு பாடசாலைகளில் மாணவர் வருகையும் குறைவு. பல சிறுவர்கள், ஏழ்மை காரணமாக, படிக்க வேண்டிய வயதில் ஆடு மேய்க்கிறார்கள். அங்குள்ள மக்களின் வாழ்க்கை ஒரு நூறாண்டுக்கு முன்னர் இருந்த மாதிரியே இப்போதும் உள்ளது.
கம்யூனிசம் எவ்வளவு "கொடுமையானது" என்று இப்போதாவது தெரிந்து கொள்ளுங்கள் மக்களே! ஆடு மேய்க்க வேண்டிய சிறுவர்களை பள்ளிக்கூடம் அனுப்பி படிக்க வைக்கலாமா? மதவாதம், இனவாதம், தேசியவாதம் பேசினால் தானே மக்களை மந்தைகளாக வைத்திருக்கலாம்?
- Kalaiyarasan
- Kalaiyarasan
கருத்துகள்
கருத்துரையிடுக